

விழுப்புரம்,
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 26-ந் தேதி மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுப்பதை தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரூ.1 கோடி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சத்து 79 ஆயிரத்து 180 ரொக்கம் மற்றும் அரிசி, புகையிலை பொருட்கள், கஞ்சா பொட்டலங்கள், சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் என ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 271 மதிப்பிலான பொருட்கள் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 43 ஆயிரத்து 451 மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தற்போது தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.