

பெங்களூரு,
புற்றுநோய் தொடர்பான ஓட்டம் (மாரத்தான்) தொடக்க விழா பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, ஓட்டத்தை தாடங்கி வைத்து பேசியதாவது:-
புற்றுநோய் ஒரு உயிர்க்கொல்லி நோய். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது அவசியம். பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட்டால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து ஓரளவுக்கு தப்பிக்க முடியும். புற்றுநோயை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு சுதாகர் பேசினார்.
மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் பேசுகையில், நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரை தூய்மையாக வைத்துக்கொள்வது மாநகராட்சி பணி மட்டுமல்ல, இந்த விஷயத்தில் பொதுமக்களும் கைகார்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.