

போலீசார் ரோந்துப்பணி
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் தேவாலயங்களுக்கோ அல்லது கோவிலுக்கோ அல்லது அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கோ, தங்கள் குடும்பத்துடன் செல்ல நேர்ந்தால் தங்கள் வீடுகளை பூட்டி செல்வதுடன், அது பற்றிய தகவல்களை தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசார் இரவு நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதி வேகமாக வாகனங்களை செலுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
வாகன சாகசங்கள்
இளைஞர்கள் அதி வேகமாக வாகனங்களை செலுத்தி பந்தயங்களில் ஈடுபடுவதும், வாகன சாகசங்களில் ஈடுபடுவதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அபாயகரமான செயல்கள் இதர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடியவர்களுக்கு மிகுந்த இடையூறாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் இருப்பதோடு, பெரும் விபத்துகளுக்கு வழிவகுப்பதோடு மட்டும் இல்லாமல் உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இதுபோன்ற வாகன பந்தயங்களில் ஈடுபடுவோர் மீதும், இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் தற்போது பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிய அனுமதி பெற்ற பின்பே கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தகவல் தெரிவிக்கலாம்
பொதுமக்களும் கொரோனா தாக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறும், விபத்துக்கள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் தங்கள் பகுதிகளில் செயல்படும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் 6379904848 என்ற பிரத்தியேக தொலைபேசி எண்ணுக்கு எந்த வித தயக்கமுமின்றி தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைத்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.