விஷம் குடித்த மாணவிகள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

திருமங்கலத்தில் விஷம் குடித்த 5 மாணவிகள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் நேரடியாக சென்று விசாரித்தார்.
விஷம் குடித்த மாணவிகள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 4 பேர் மதிய உணவுக்கு பின்பு திடீரென வாந்தி எடுத்தனர். இதைப்பார்த்து பதட்டமடைந்த ஆசிரியைகள், மாணவிகளிடம் விசாரித்து விட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவிகளை சேர்த்தனர்.

அதைத்தொடர்ந்து அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மற்றொரு மாணவி, வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை பெற்றோர் விசாரித்த போது விஷம் சாப்பிட்டது தெரியவந்தது. அவரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மாணவிகள் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்த்து விசாரித்தார். பின்னர் மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினார். மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மருத்துவ அதிகாரி பூமிநாதன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, தாசில்தார் நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- மாணவிகள் 5 பேரும் பல்வேறு காரணங்களால் விஷம் குடித்து உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் இது போன்ற சம்பவங்களை தடுக்க மருத்துவத்துறை, மனோத்தத்துவம், சமூக நலத்துறை, கல்விதுறையின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டர் மாணவிகள் படித்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். முன்னதாக ஆஸ்பத்திரி முன்புள்ள அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த பெண்ணிடம் உணவு குறித்து கேட்ட அவர், அங்குள்ள ஊழியர்களிடம் பேசி ஆலோசனை வழங்கினார். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள விபத்து, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com