தென்காசி, செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 37 பேர் கைது

தென்காசி, செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி, செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 37 பேர் கைது
Published on

தென்காசி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை அவதூறாக பேசியதாக கூறி அதை கண்டித்து, தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணியினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தனர். இதற்காக அவர்கள் இலஞ்சி விலக்கு பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஊர்வலமாக வந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட பார்வையாளர் மாசானம், நகர தலைவர் நாராயணன், நகர செயலாளர் பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரிமணி உள்ளிட்ட 11 பேரை தென்காசி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

பா.ஜனதா மாவட்ட செயலாளர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், இந்து முன்னணி செங்கோட்டை ஒன்றிய தலைவர் குளத்தூரான், விசுவ இந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, துறவியர் பேரவை மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com