

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் திகழ்கிறது.. இந்த கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந்தேதியன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சாமி உள் புறப்பாடு நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள் புறப்பாடு மட்டுமே நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் வெளிப்புறப்பாடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள செல்வர் மண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேர் போல் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி உள்புறப்பாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜெண்டு சம்பத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.