3-வது அகல ரெயில் பாதையை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

திருச்சி-பொன்மலை இடையே புதிதாக அமைக்கப்பட்ட 3-வது அகல ரெயில் பாதையை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.
3-வது அகல ரெயில் பாதையை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
Published on

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக தினமும் ஏராளமான பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் வந்து செல்கின்றன. திருச்சி-பொன்மலை இடையே தற்போது இரட்டை அகல ரெயில் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக ஒரே நேரத்தில் எதிர்எதிரே ரெயில்கள் இயக்கப்படும் போது சில நேரங்களில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒரு சில ரெயில்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதை தவிர்ப்பதற்காக திருச்சி-பொன்மலை இடையே புதிதாக 3-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த பணி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சை-சோளகம்பட்டி வரை அமைக்கப்பட்ட இரட்டை அகல ரெயில் பாதையை தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிவேக ரெயிலில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வை முடித்துக்கொண்டு நேற்று மதியம் ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் பொன்மலை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு டிராலியில் அமர்ந்து கொண்டு பொன்மலை-திருச்சி இடையே அமைக்கப்பட்ட 3-வது அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தண்டவாள உறுதித்தன்மை, தண்டவாளத்தின் நடுவில் பொருத்தப்பட்டு உள்ள சிலீப்பர் கட்டைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். அதேபோன்று மின்பாதையையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, புதிதாக அமைக்கப்பட்ட இந்த ரெயில் பாதையின் உறுதித்தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதன் பாதுகாப்பு குறித்து ஆணையர் சான்றிதழ் அளிப்பார். அதன்பிறகு இந்த பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com