

சாத்தூர்,
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி சாத்தூர் கோர்ட்டு அனுமதியுடன் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் எதிர்பார்த்த முழு தகவல்களும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் போலீஸ் காவலுக்கான கெடு முடிந்ததால் நேற்று மதியம் நிர்மலாதேவி சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
மாஜிஸ்திரேட்டு கீதா விதிமுறைப்படி விசாரணை மேற்கொண்ட பின்பு அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி வரை நிர்மலாதேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட போலீசார் அவரை அழைத்துச்சென்று, மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.
நிர்மலாதேவி முழு தகவலை வெளியிடாத நிலையில் அவரை மீண்டும் விசாரிக்க விரும்பி சி.பி.சி.ஐ.டி.போலீசார் சார்பில் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிர்மலாதேவி சார்பில் வக்கீல் யாரும் கோர்ட்டுக்கு வரவில்லை. கோர்ட்டு வளாகத்தில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.