

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் தின விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப் படி பள்ளிகளை திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கு இணை இயக்குநர் தலைமையில் குழுவினர் கண்கானிப்பு பணியில் ஈடுபடுவார்கள். முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும். பொது தேர்வு தேதிகளை முதல்வர் அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.