

பனப்பாக்கம்,
பனப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவருடைய தம்பி சிவா (39). இருவரும் தச்சுத்தொழிலாளிகள். இவர்களுக்கு திருமணமாகி, கணவன்- மனைவிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரின் மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று இறந்து விட்டார். இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த அவருடைய அண்ணன் பிரபுவுக்கு, பொதுமக்கள் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு பனப்பாக்கத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஆயர்பாடி கிராமத்திற்கு வந்துள்ளார். ரங்கமங்கலம் அருகே வந்தபோது ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் நிறுவன பஸ், பிரபு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.