பெண் நீதிபதி மகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் பெண் நீதிபதி மகளிடம் செல்போன் பறித்த திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் துப்புதுலங்கியது.
பெண் நீதிபதி மகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் ஹரி அபூர்வா (வயது 26). இவர் குடும்ப நலக் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரின் மகள் ஆவார். கடந்த 20-ந் தேதி இரவு 10.15 மணியளவில் அதே பகுதியில் ஹரி அபூர்வா செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், ஹரி அபூர்வாவின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து, கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக, செல்போன் பறிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்ட அவர் கள், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதாவது அதில் பதிவாகி இருக்கிறதா? என்பதை ஆராய்ந்தனர்.

போலீசார் நினைத்தது போலவே, கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு காட்சி பதிவாகி இருந்தது. அதை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில், செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ராயப்பேட்டையை சேர்ந்த சுதர்சன் (வயது 19), திருவல்லிக்கேணியை சேர்ந்த புருஷோத்தமன் (19) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com