

மும்பை,
மும்பை சயாத்திரி விருந்தினர் இல்லத்தில் நேற்று முன்தினம் ஜனநாயகம், தேர்தல் மற்றும் நல்லாட்சி என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டு பேசியதாவது:
தேர்தல்கள் ஜனநாயகத்தின் உரைகல். ஆனால், இன்றைய நாட்களில் தேர்தல்கள் செலவு மிக்கதாக மாறிவிட்டது. 5 ஆண்டுகால இடைவெளியில் மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,500 கோடி செலவாகிறது. தேர்தல் செலவை குறைக்க கூட்டு சிந்தனை இன்றியமையாதது.
அரசியல் ஒற்றுமை வாயிலாக இது சாத்தியப்படும். உங்களுக்கு ஒன்றை எச்சரிக்கிறேன். தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர், ஜனநாயகத்தின் உண்மையான பயிற்சியாளர்களாக இந்தியர்கள் திகழ்ந்தனர்.
இவ்வாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார்.