

பெங்களூரு
பெங்களூரு நகரை உருவாக்கியவர் நாடபிரபு கெம்பே கவுடா.
கர்நாடக கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெங்களூருவில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏரிகள், பூங்காக்கள் அதிகமாக இருந்தன. இங்கு மூன்று வகையான காலநிலையிலும் சீதோஷ்ணநிலை மிதமாகவே இருக்கும். மின் விசிறியே தேவை இல்லை என்ற நிலை இருந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. கெம்பேகவுடா பெங்களூருவில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்களை கட்டி எல்லைகளை அமைத்தார். ஆனால் இன்று பெங்களூரு அந்த எல்லைகளை தாண்டி மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டது.
பெங்களூருவை கெம்பே கவுடா தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைத்தார். பெங்களூரு இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு கெம்பேகவுடா முக்கிய காரணம் ஆவார். மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றுக்கு கெம்பேகவுடா பெயரை சூட்டியுள்ளோம். சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தோம். அதன்படி அவருடைய பெயர் சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
முதல் முறையாக கர்நாடக அரசு கெம்பேகவுடா ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டடங்களிலும் இந்த ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் கெம்பேகவுடா ஜெயந்தி கொண்டாடப்படும். கெம்பேகவுடா ஒரு சாதிக்கு மட்டும் சேர்ந்தவர் அல்ல. அவர் இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர்.
சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவின் சிலை பெரியதாக நிறுவப்படும். மேலும் சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் அமையும் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு கெம்பேகவுடாவின் பெயர் சூட்டப்படும். பெங்களூரு பல்கலைக்கழகம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கெம்பேகவுடாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்படும். கெம்பேகவுடா ஆணையம் எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.