மந்திரி வினோத் தாவ்டே மீது கருப்பு பொடி தூவ முயன்றவர் சிக்கினார்

சத்தாராவில் மந்திரி வினோத் தாவ்டே மீது கருப்பு பொடி தூவ முயன்ற நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மந்திரி வினோத் தாவ்டே மீது கருப்பு பொடி தூவ முயன்றவர் சிக்கினார்
Published on

மும்பை,

மராட்டிய கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே நேற்று சத்தாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, ஒருவர் விறுவிறுவென அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர். சோதனையில், அவரது கையில் கருப்பு பொடி பாக்கெட் இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவரை அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் மாருதி ஜன்கர் என்பதும், தான் சார்ந்த தங்கர் சமுதாய மக்களுக்கு கல்வி- வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, மந்திரி வினோத் தாவ்டே மீது கருப்பு பொடி தூவ முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவத்தால் நேற்று சத்தாராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே, சோலாப்பூர் பல்கலைக்கழகத்துக்கு தங்கர் சமுதாயத்தை சேர்ந்த அகில்யபாய் ஹோல்கரின் பெயரை சூட்டக்கோரி, சில நாட்களுக்கு முன்பு மந்திரி வினோத் தாவ்டே மீது ஒருவர் மஞ்சள் பொடி தூவினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொருவர் கருப்பு பொடி தூவ முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com