கரூர் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு

கரூர் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு
Published on

நொய்யல்,

கரூர் மாவட்டம் சேமங்கி அருகே செல்வநகரை சேர்ந்தவர் காத்தான் (வயது 55). இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காத்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வெடிபொருளாக இருக்கலாம் என கருதி வீட்டின் கதவை திறக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விடிந்ததும் காத்தான் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அந்த மர்மபொருள் எந்திரத்தின் இரும்புத் துண்டு போன்று காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது.

இது குறித்து வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கும், வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசாரும் கிராம நிர்வாக அதிகாரி பூபதியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இரும்பு துண்டின் எடை 5 கிலோவுக்கு மேல் இருக்கும். மேலும் எதற்குரிய பொருள் என்பதை கண்டறியமுடியவில்லை. இதையடுத்து அந்த இரும்புத் துண்டு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டது. வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com