

திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் சாலையை தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை சாலையுடன் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1, 050 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டுமான பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.ரூ.91 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கும் குறைவான நேரத்தில் வந்து செல்ல முடியும். திருச்சி - தஞ்சாவூர் மாவட்டங்களை குறுக்காக இணைக்கும் இந்த பாலத்தினால் கல்லணை மற்றும் சுற்றுவட்டார 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த பயன் அடைய முடியும்.
ஆய்வு பணியை முடித்த பின்னர் கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
மே மாதம் பயன்பாட்டுக்கு வரும்
பிரதான பாலம் பணிகள் உள்பட 90 சதவீத பணிகள் நிவறவடைந்து விட்டன. தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் அணுகு சாலைகள் அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் விரைவில் முடிவைடைந்து வருகிற மே மாதம் இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) நிர்மலா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.