முககவசங்கள் அதிக விலைக்கு விற்பனை சுகாதாரத்துறை மந்திரி ஒப்புதல்

முககவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே ஒப்புக்கொண்டு உள்ளார்.
முககவசங்கள் அதிக விலைக்கு விற்பனை சுகாதாரத்துறை மந்திரி ஒப்புதல்
Published on

மும்பை,

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மராட்டியத்தில் முககவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தநிலையில் முககவசங்கள் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுவதை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே ஒப்புக்கொண்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலுக்கு முன் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட முககவசங்கள் தற்போது ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல என்-95 ரக முககவசங்கள் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

விலை நிர்ணயம்

இதுதொடர்பான புகார்களை கவனிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முககவச நிறுவனங்களின் கடந்த ஆண்டு விலையையும், தற்போதைய விலையையும் சரிபார்ப்பார்கள். மேலும் முககவசங்களுக்கான விலைப்பட்டியல் விரைவில் தயாராக உள்ளது. அந்த விலை பட்டியல் தயாரான பிறகு மாநில அரசு நிர்ணயம் செய்யும் விலையில் தான் முககவசங்களை விற்பனை செய்ய முடியும். நோய் தொற்று காலம் லாபம் சம்பாதிக்கும் நேரம் அல்ல. முககவசம் போல கிருமி நாசினிகளும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com