ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய வக்கீல்

ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபரை, வக்கீல் ஒருவர் சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் பிடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றினார்.
ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய வக்கீல்
Published on

மும்பை,

தானே மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(வயது19). இவர் தனது நண்பர் பவன் குமாருடன் மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்தார். கார்- பாந்திரா இடையே ரெயில் வந்தபோது வாசற்படியில் இருந்த சஞ்சய் குமார் கைப்பிடி நழுவி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அங்கிருந்த பயணிகள் அவரை மீட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த வக்கீல் மயூர் மேத்தா என்பவர் உடனடியாக அங்கு ஓடிச்சென்று சஞ்சய் குமாரை மீட்டு அருகில் உள்ள பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக பரேல் கே.இ.எம் ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதனைத்தொடர்ந்து வக்கீல் மயூர் மேத்தா தனது சொந்த பணத்தில் ஆம்புலன்சு பிடித்து சஞ்சய் குமாரை கே.இ.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த சஞ்சய் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து மனிதாபிமான முறையில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய வக்கீல் மயூர் மேத்தாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com