இளைஞர்களிடையே விழிப்புணர்வு தேவை: சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் ஆதங்கம்

சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள். இளைஞர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறினார்.
இளைஞர்களிடையே விழிப்புணர்வு தேவை: சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் ஆதங்கம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் இயங்கி வரும் கொரோனா ஆலோசனை கட்டுப்பாடு மையத்தை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 58 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் 65 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர். இளைஞர்களிடையே முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு தேவை.

வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டு வரும் களப்பணியாளர்களிடம், அறிகுறி இருந்தால் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி பொது மக்கள் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாதிக்கபட்டவர்களை கண்டறிந்து தொற்று பரவலை தடுக்க முடியும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் தொலைபேசி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. அறிகுறி இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை, மண்டல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அம்மா மாளிகையில் இயங்கும் கொரோனா ஆலோசனை மையத்தில், நோய் தொற்று பாதித்தவர்களின் தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனை மையத்துக்கு கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி (நேற்று) வரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 361 அழைப்புகள் வந்துள்ளது. தற்போது மண்டல ஆலோசனை மையங்களில் மனநலம் குறித்த ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com