

கலசபாக்கம்,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொகுதியின் பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து நேற்று புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார், நயம்பாடி, சி.நம்மியந்தல், காஞ்சி, புதுப்பாளையம் பேரூராட்சி ஆகிய பகுதியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுடன் திறந்த வேனில் சென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குசேகரித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
நான் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக பணியாற்றியுள்ளேன். தொகுதி மக்களிடம் அவர்களது கோரிக்கைகளை நேரடியாக வந்து பெற்று நிறைவேற்றி தந்து உள்ளேன். அதன்படி இப்போது எங்கள் கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலசபாக்கம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.
நான் தற்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் தொகுதி வளர்ச்சிக்கும் மக்களுக்கும் பாடுபடுவேன்.
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாக்கு சேகரிப்பின்போது கலசபாக்கம் தொகுதி வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரா.காளிதாஸ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேரு, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் அமுதா அருணாசலம், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, என்.துரை, ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கே.டி.ராஜமூர்த்தி, ஊராட்சி செயலாளர்கள் ஞானவேல், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.