தந்தைக்கு மரியாதை செலுத்த அனுமதி வழங்கவில்லை; டி.கே.சிவக்குமார் கண்ணீர் மல்க பேட்டி

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது.
தந்தைக்கு மரியாதை செலுத்த அனுமதி வழங்கவில்லை; டி.கே.சிவக்குமார் கண்ணீர் மல்க பேட்டி
Published on

பெங்களூரு,

டி.கே.சிவக்குமாரிடம் இதுகுறித்து அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந்தேதியில் இருந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். காலை 12 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 8.45 மணி வரை நீடித்தது. அதன்பின்னர், டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மறைந்த எனது தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும், அதற்காக ஒரு நாள் அனுமதி வழங்குமாறு கேட்டேன். ஆனால் இதை ஏற்க அமலாக்கத்துறையினர் மறுத்துவிட்டனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் பின்னணியில் பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். இது எனக்கு தெரியும் என்றார். இந்த பேட்டி அளிக்கையில் டி.கே.சிவக்குமார் கண்ணீர் மல்க இந்த கருத்தை கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், டி.கே.சிவக்குமார், மக்களிடம் அனுதாபத்தை தேடவே கண்ணீர்விட்டு நாடகமாடுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com