காரில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது மாநகர பஸ் டிக்கெட் பரிசோதகரிடம் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை

காரில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற மாநகர பஸ் டிக்கெட் பரிசோதகரிடம் கத்திமுனையில் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது மாநகர பஸ் டிக்கெட் பரிசோதகரிடம் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 60). இவர், கிண்டியில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் அதிகாலை வேலைக்கு செல்வதற்காக இரும்புலியூர் பஸ் நிலையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் பஸ் வராததால் விரக்தி அடைந்த சுந்தரேசன், அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து, கிண்டி வரை செல்ல லிப்ட் கேட்டு ஏறிச்சென்றார்.

அந்த காரில் ஏற்கனவே 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. தாம்பரம் பகுதியை தாண்டி சிறிதுதூரம் சென்றவுடன் காரில் இருந்த 3 பேரும் சுந்தரேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 10 கிராம் தங்க மோதிரம், ரூ.2500 மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரேசன், தாம்பரம் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com