போலீஸ்காரர் போல பழகி ஓடும் ரெயிலில் பெண்ணிடம் பணப்பை, செல்போன் பறிப்பு காவலாளி கைது

காம்யானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் பணப்பை, செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ்காரர் போல பழகி ஓடும் ரெயிலில் பெண்ணிடம் பணப்பை, செல்போன் பறிப்பு காவலாளி கைது
Published on

அம்பர்நாத்,

மும்பை குர்லா டெர்மினலில் இருந்து சம்பவத்தன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சாரதா சிர்சாட் என்ற பெண் பயணம் மேற்கொண்டார். அதே பெட்டியில் ஒரு வாலிபர் அப்பெண்ணின் இருக்கை அருகே அமர்ந்திருந்தார். இந்தநிலையில் அவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது, அவர் தன்னை போலீஸ்காரர் என பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பெண் வைத்திருக்கும் உடைமைகளை நோட்டமிட்டார்.

இந்தநிலையில் கசாரா ரெயில் நிலையம் அருகே ரெயில் மெதுவாக வந்த போது திடீரென அந்த வாலிபர் அப்பெண் வைத்திருந்த பணப்பை, செல்போனை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் சத்தம் போட்டால் ரெயிலில் இருந்து தள்ளி விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட சாரதா சிர்சாட் கசாரா ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெண்ணிடம் பணப்பை, செல்போனை பறித்துச்சென்றது கல்யாண் மேற்கு மகரால் நகர் பகுதியை சேர்ந்த சோபன் அவாத் என்பது தெரியவந்தது. மேலும் அவர் காவலாளியாக வேலை பார்த்து வருவதும் போலி போலீஸ்காரர் எனபதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com