திருச்சி மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் நடந்தது

திருச்சி மண்டல அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் நேற்று நடந்தது.
திருச்சி மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் நடந்தது
Published on

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, லால்குடி, முசிறி, திருச்சி ஆகிய கல்வி மாவட்ட அளவில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஏற்கனவே உடல்திறன் போட்டிகளான தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த தடகள போட்டிகளில் கல்வி மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு திருச்சி மண்டல அளவிலான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்தது.

போட்டியினை பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டிகளான 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிகளில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு தலா 70 மாணவ- மாணவிகள் வீதம் மொத்தம் 560 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த தடகள போட்டிகளில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கி பாராட்டினார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. தடகள போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் விளையாட்டு போட்டிகளுக்கு மாநில அளவில் அளிக்கப் படும் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிர மணியராஜா, தடகள பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com