

சொத்து தகராறு
சென்னையை அடுத்த மேடவாக்கம் அண்ணாமலை நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் (வயது43). கார் டிரைவர். இவரது தம்பி முருகன் (40). லாரி டிரைவர். அண்ணன், தம்பி இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், குடியிருக்கும் வீட்டின் சொத்து யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அண்ணன் மற்றும் தம்பி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டின் முன்பு அண்ணன் செந்தில் கார் நின்று உள்ளது. இதையடுத்து, காரை ஓரமாக நிறுத்துமாறு தம்பி முருகன் அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஒருவரையொருவர் அடித்து கொண்டனர். மேலும், இதில் ஆத்திரமடைந்த முருகன் கீழே இருந்த கருங்கலை எடுத்து செந்திலை தாக்கினார்.
தம்பி கைது
இதில் தலையில் பலத்த காயமடைந்த செந்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று காலை உயிரிழந்தார்.
இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணனை கொலை செய்து தம்பி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பியே அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.