

காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 39 ஊராட்சிகளில் உள்ள 1,950 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 8 ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 400 பெண் பயனாளிகளுக்கு 400 கறவை பசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோன்று விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.47 கோடியே 34 லட்சம் மதிப்பில் 36,659 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்று பேசினார்.