

பரமத்திவேலூர்,
ஜேடர்பாளையம் வடகரையாத்தூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணை உள்ளது. இதன் இடதுகரை கால்வாய் ராஜாவாய்க்கால் என அழைக்கப்படுகிறது. இந்த வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தவும், பழுதடைந்த மதகுகளை சீரமைக்கவும் ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வேளாண் பாசனத்திற்காக ராஜாவாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று படுகை அணையில் இருந்து ராஜாவாய்க்காலில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, கலெக்டர் மெகராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தனர். மேலும் சீறி பாய்ந்து சென்ற தண்ணீரில் மலர் தூவினர்.
இதில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கவுதமன், ஆவின் தலைவர் ராஜேந்திரன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் சேகர், வெற்றிவேல், சந்திரமோகன், தாசில்தார் சுந்தரவள்ளி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன், வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்மணி என்ற சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராஜாவாய்க்காலில் தற்போது வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.