தவறுதலாக போலீஸ் காரில் ஏறிய கடத்தல்காரர்

டென்மார்க்கில் வாடகைக் கார் என நினைத்து போலீஸ் காரில் ஏறிய போதைப்பொருள் கடத்தல்காரர் சிக்கிக் கொண்டார்.
தவறுதலாக போலீஸ் காரில் ஏறிய கடத்தல்காரர்
Published on

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு நேரம் சரியில்லை. கையில் ஆயிரம் போதைமருந்து கலந்த சுருட்டுகளுடன் டாக்சி என நினைத்து போலீஸ் வாகனத்தில் ஏறிய அவர் பிடிபட்டார்.

அந்த நபர், வீட்டுக்குச் செல்லும் அவசரத்தில் இந்தத் தவறை செய்துவிட்டதாக டென்மார்க் போலீசார் கூறுகின்றனர்.

கோபன்ஹேகனில் போதைமருந்து வர்த்தக மையமாகக் கருதப்படும் கிறிஸ்டியானியா பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

பிடிபட்ட போதைமருந்து கடத்தல்காரர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் கூறினர்.

அவசரமாக வீட்டுக்குச் செல்ல நினைத்த ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் கிறிஸ்டியானா பகுதியில் ஒரு டாக்சியில் ஏறினார். பிறகுதான் ஒரு போலீஸ் காரில் உட்கார்ந்திருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சிக்குள்ளானார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஆயிரம் போதைப்பொருள் சுருட்டுகளுடன் ஒரு கடத்தல்காரர் தாமாக வந்து சிக்கிக்கொண்டதில் போலீசாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

டென்மார்க்கில் கஞ்சா வைத்திருப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன் போதைப்பொருள் வட்டாரத்தில் அவற்றைக் கடத்துவோர், விற்பனை செய்வோரை பிடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com