

புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி மனு அளித்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க் கிழமை) புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுதொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவியது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடி புதுவை மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளார். அவரை திரும்ப பெறக்கோரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா காலகட்டத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை ஒத்திவைக்குமாறு வியாபாரிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. எனவே முழு அடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.