

புதுடெல்லி,
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளார். இவரது பெயரில் யூடியூப் சேனல் ஒன்று இயங்கி வருகிறது. அதை சுமார் 73,000 பேர் பின்தொடர்கின்றனர். இந்த வந்தே மாதரம் பாடலை ஒரு ஆல்பம் போன்று எடுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இந்த பதிவு மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தாங்காவின் கவனத்திற்கு சென்றது. இந்த வீடியோவை தனது டுவிட்டரில், லுங்லேய் பகுதியைச் சேர்ந்த சிறுமி எஸ்தர் நாம்தே, மயக்கும் குரலால் வந்தே மாதரம் பாடலை பாடியிருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தாங்காவின் டுவிட்டை, ஷேர் செய்திருக்கிறார். மேலும், மிகவும் அற்புதமான மற்றும் மதி மயங்கக்கூடிய! எஸ்தர் நாம்தேவின் பாடலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.