

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக அளவு தொகுதிகளை கைப்பற்றியது. இந்த கூட்டணிக்கு தலைமை வகித்த பா.ஜ.க. பிரதமராக மோடியை தேர்வு செய்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புதல் வழங்கின.
இதன்பின் பிரதமராக கடந்த மே 30ந்தேதி மோடி பதவியேற்றார். அவரது அமைச்சரவை சகாக்களும் அன்று பதவியேற்று கொண்டனர். வருகிற 17ந்தேதி நாடாளுமன்றம் கூட இருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கு வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதேபோன்று மக்களவையில் புதிய சபாநாயகர் தேர்வையும், வீரேந்திரகுமார் நடத்தி வைப்பார். வருகிற 17ம்தேதி கூடும் நாடாளுமன்றத்தின் மக்களவை நடவடிக்கைகளை வீரேந்திரகுமார் கவனிப்பார்.