பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்த முன்னாள் மந்திரி - மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பு

பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்த முன்னாள் மந்திரி பபன்ராவின் பேச்சுகள் மராட்டிய பா.ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்த முன்னாள் மந்திரி - மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பு
Published on

அவுரங்காபாத்,

மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது குறித்து உரையாற்றினார். அவர் கூறுகையில், அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடலாம். இதில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மந்திரிகளை பங்கேற்க வைக்கலாம். அத்துடன் ஒரு கதாநாயகியை அழைக்கலாம். இல்லையென்றால் நமது தாசில்தார் மேடத்தை அழைக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் யார் பெயரையும் அவர் குறிப்பிடாவிட்டாலும், பபன்ராவின் இந்த பேச்சுகள் அடங்கிய ஆடியோ பதிவு மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பா.ஜனதா கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பபன்ராவ், சிறப்பாக பணி செய்பவர்களை கதாநாயகன், கதாநாயகி என அழைப்பது இயல்புதான் என்றும், தனது பேச்சின் மூலம் யாரையும் அவமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com