

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திரமோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்:-இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், பல்வேறு துறையில் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போக்குவரத்துத் துறையில், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன இப்படி பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலே நிதி ஆதாரத்தை உருவாக்கி, நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:-அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் கூறப்பட்டு வருகிறதே? அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:-அமைச்சர்கள் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். ஆனால் வழக்கின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை தன்மை தெரியாமல் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினால், யாரும் இங்கு அமைச்சர்களாக இருக்க முடியாது. ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்து அது தான் உண்மை என்று கூறினால், தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் யாரும் அமைச்சர்களாக இருக்க முடியாது.
அண்மையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இதில் 93 சதவீதம் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால், அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்க முடியுமா?. வேண்டுமென்றே ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தியை பரப்பி வருகிறது.