பாளையங்கோட்டையில் தற்கொலை செய்த வடமாநில பெண் உடலை வாங்க முன்வராத உறவினர்கள்

பாளையங்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உடலை வாங்க அவருடைய உறவினர்கள் முன்வரவில்லை.
Published on

நெல்லை,

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் மிதுன். இவருடைய மனைவி யபா (வயது 23). இவர் முதல் கணவரை பிரிந்து மிதுனை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த தம்பதி வேலை தேடி கர்நாடக மாநிலத்துக்கும், பின்னர் தமிழ்நாட்டுக்கும் வந்தனர்.

வேளாங்கண்ணியில் தங்கி இருந்து வேலை செய்த இவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர். 2 நாட்கள் மட்டுமே தங்கி இருந்த நிலையில் மிதுன், தன்னுடைய குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி யபா அந்த வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். பாளையங்கோட்டை தாலுகா போலீசார், யபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். யபா வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் லட்சக்கணக்கில் பணம் உள்ளது. யபா அடிக்கடி கன்னியாகுமரிக்கு சென்று வந்ததால், அவர் வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்? அந்த தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில், யபா உடலில் வேறு இடங்களில் காயங்கள் இல்லை, எனவே தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் கொல்கத்தாவில் உள்ள எபாவின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர் யபாவின் உடலை வாங்க நெல்லைக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வாரத்துக்குள் யபாவின் உடலை வாங்க யாரும் முன்வராவிட்டால், போலீசாரே உடலை புதைக்க முடிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com