ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்

சிங்கவரம் ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
Published on

செஞ்சி, 

செஞ்சி அருகே சிங்கவரம் கிராமத்தில் உள்ள மலை மீது ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது பல்லவர் கால குடவரை கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் சமேத ரங்கநாத பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மேற்பார்வையில் உபயதாரர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com