விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித் பவார் பயணம் செய்த விமானத்தின் கேப்டன் சுமித் கபூர். இவர்16 ஆயிரத்து 500 மணிநேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர்.
விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
Published on

மும்பை,

புனே அருகே நடந்த விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமான பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் மும்பை போலீஸ் பிரிவை சேர்ந்த அஜித்பவாரின் பாதுகாப்பு அதிகாரி விபித் ஜாதவ் ஆகியோருடன் வாழ்க்கையும் முடிந்தது.

விமான கேப்டன் சுமித் கபூர்:- இவர் டெல்லியை சேர்ந்தவர். 16 ஆயிரத்து 500 மணிநேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். அதுமட்டும் இன்றி, ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளராகவும் சக விமானிகளால் மதிக்கப்பட்டவர். இத்தனை அனுபவம் வாய்ந்த ஒரு விமானியின் கட்டுப்பாட்டில் இருந்த விமானம் விபத்துக்குள்ளானது விமான போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை விமானி சாம்பவி பதக்:- மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகள். இவர் டெல்லியில் உள்ள விமானப்படை பால பாரதி பள்ளியில் பயின்றவர். 28 வயதான இவர், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒரு சிறந்த எதிர்காலத்தை கொண்ட வீராங்கனையாக கருதப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக வி.எஸ்.ஆர் . நிறுவனத்தில் பணியாற்றி வந்த சாம்பவி பதக், மிக குறைந்த வயதிலேயே அதிக பொறுப்புடன் விமானத்தை இயக்கியவர் என பாராட்டப்பட்டார்.

விமான பணிப்பெண் பிங்கி மாலி:- மும்பை ஒர்லியை சேர்ந்தவர். 29 வயதே ஆன இவர் தனது தந்தை சிவக்குமார் மாலியின் கனவை நிறைவேற்றுவதற்காகவே விமான பணிப்பெண் வேலையை தேர்ந்தெடுத்தார். அவரது கனவை இந்த விபத்து சிதைத்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ்:- மும்பையை அடுத்த தானேயில் உள்ள விட்வா பகுதியை சேர்ந்தவர். கடமை தவறாத அதிகாரியாக கருதப்படும் இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் தாய் உள்ளனர். இவரது இறப்பு செய்தி கேட்ட அவரது குடியிருப்பு பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com