

இஸ்லமாபாத்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில், உயர் பொறுப்பு மிக்கவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், உச்ச கட்ட பாதுகாப்பு கொண்ட இஸ்லமாபாத் சிறைச்சாலையில்தான் அடைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இதற்கு நேர்மாறாக, பல்வேறு கொடூர குற்றங்கள் புரிந்த கைதிகள், மற்றும் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அடிலா சிறையில், நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப்புக்கு சிறைச்சாலையில் உரிய அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறைச்சாலை வளாகத்திற்குள் நடந்து சென்ற நவாஸ் ஷெரீப்பை பார்த்த சக கைதிகள் அவரை பார்த்து ஏளனம் செய்து கூச்சலிட்டனர். இந்த சம்பவம், நவாஸ் ஷெரிப்பின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகியிருப்பதால், இஸ்லமாபாத்தில் உள்ள ஷிஹாலா சிறைச்சாலைக்கு நவாஸ் ஷெரீப் அழைத்துச்செல்லப்படலாம் எனவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.