திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

காரைக்கால்,

திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள் பழித்து வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 23ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து விநாயகர் உற்சவம் சுப்பிரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை தேரோட்டம் தொடங்கியது.

இதையடுத்து சொர்ண கணபதி தேர் முன்செல்ல, 2-வது சுப்பிரமணியர், 3-வது பெரிய தேரில் செண்பக தியாகராஜர், 4-வது நீலோத்பலாம்பாள், 5-வது சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன. காரைக்கால், திருநள்ளாறு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், 'தியாகேசா, தியாகேசா' என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்தனர்.

விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரம்மோற்சவ விழாவில் நாளை (சனிக்கிழமை) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com