பகவதி அம்மன் கோவிலில் 12-ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா- நிகழ்ச்சிகள் விவரம்

சித்ரா பௌர்ணமி அன்று பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
பகவதி அம்மன் கோவிலில் 12-ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா- நிகழ்ச்சிகள் விவரம்
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா வருகிற 12-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதன்பிறகு அம்மனுக்கு தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பழனிகுமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com