திருப்பதி பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

இன்று இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவின் முன்னால், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணி வகுத்துச்சென்றன. ஆண், பெண் கலைஞர்கள் நாட்டிய, நடன, இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பக்தர்கள் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். ஜீயர் சுவாமிகள் கோஷ்டி கானம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பாகாசூர வத அலங்காரத்தில் தனது உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்தநிலையில், பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று கல்ப விருட்ச வாகனம் வீதி உலா நடைபெற்றது. மக்களுக்கு அனைத்து வரங்களையும், வளங்களையும் அள்ளித்தருபவர் ஸ்ரீமன் நாராயணனே என்பதை குறிக்கும் வகையில் கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நாளை காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு கருட வாகன (கருட சேவை) வீதி உலா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com