வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலம்... ராவணன் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டம்

டெல்லி செங்கோட்டை மைதானத்தில் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலம்... ராவணன் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டம்
Published on

நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றி பெற்றார் என்பதாகும்.

இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது ராவணனின் உருவபொம்மையை எரித்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

அவ்வகையில் விஜயதசமியை முன்னிட்டு இன்று வட மாநிலங்களில் தசரா பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே ராம் லீலா நிகழ்ச்சிகள் நடத்தி, பிரமாண்டமான ராவண உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு ராவண உருவ பொம்மைக்கு நெருப்பூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

டெல்லி செங்கோட்டை மைதானத்தில் உள்ள மாதவ்தாஸ் பூங்காவில் ஸ்ரீ தர்மிக் ராம்லீலா கமிட்டி சார்பில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்றார். அப்போது, ராம் லீலா கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை கண்டு களித்த அவர், அம்பெய்து ராவண உருவ பொம்மையை எரியூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார். ராம் லீலா நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com