திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூவங்கி சேவை நடைபெற்றது.
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
Published on

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்ற தலமாகும். இக்கோவிலுக்கு எதிரில் அவுசதகிரி மலையில் பிரசித்தி பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. இக்கோவிலுக்கு வியாழக்கிழமை, விஜயதசமி, திருவோணம் நட்சத்திரம் அன்று ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கல்வி அதிபதியான லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டு செல்வது வழக்கம்.

இங்கு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம். ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு உற்சவம் கடந்த மாதம் 27- ந் தேதி தொடங்கியது.

அன்றைய தினம், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் ஹயக்ரீவருக்கு செய்யப்படும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை நடைபெற்று பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் ஹயக்ரீவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று, ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூவங்கி சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாற்றுமுறை மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com