பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை

பெருமாளின் வாகனமான கருடனை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.
பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை
Published on

பெருமாள் கோவிலுக்குள் செல்லும் முன், நம் கண்களில் முதலில் தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம். அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது சிறிது நேரம் உட்கார்ந்து இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியாக பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியாக சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com