நந்தி பற்றிய தகவல்

* ‘நந்தி’ என்றால் ‘ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர்’ என்று பொருள்.
நந்தி பற்றிய தகவல்
Published on

* நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

* பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

* நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேஸ்வரர் கோவிலில் உள்ளது.

* ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே, இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

* தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும், தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

* மதுரை ஆவணி மூல வீதியில் மாக்காளை' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் தரிசிக்கலாம்.

* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன்பாக தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

* மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி, கண்களைக் கவரும் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

* கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

* மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

* திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னிதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

* சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

* கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கா மலையே நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையே பெண்ணாறு, பாலாறு, பொன்னையாறு ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இந்த மலை இருக்கின்றது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நந்தி கோவில் என்பதால், நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

* நந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

- பொ.பாலாஜிகணேஷ்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com