மஹாசிவராத்திரி விழா: வேலூரில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!

மக்கள் ஆதியோகிக்கு தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.
மஹாசிவராத்திரி விழா: வேலூரில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!
Published on

ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை டிசம்வர் 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதி ஆற்காட்டில் இருக்கும் ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ளது. பிப். 3-ம் தேதி கருகம்புத்தூர், சேண்பாக்கம் டவுன், கொணவட்டம், விருஞ்சிபுரம், பொய்கை, ஊசூரிலும், 4-ம் தேதி வீர ரெட்டிப்பாளையம், அரியூர், தொரைப்பாடி, வேலூர் கோட்டையிலும், 5-ம் தேதி பென்னாத்தூர், கணியம்பாடி, பாகாயம், விருப்பாச்சிபுரம், வேலப்பாடி, காட்பாடி, சத்துவாச்சாரிஆகிய இடங்களிலும் ஆதியோகியை தரிசனம் செய்யலாம்..

இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். விருப்பம் உள்ள மக்கள் ஆதியோகிக்கு தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

இதனுடன் 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 மரத்திலான தேர்களை இழுத்தபடி பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளோடு கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதே போல மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தண்டாயுதபாணி கல்யாண மண்டபத்தில் மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com