குலசேகரபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம்.. ஆற்றில் அகல்விளக்கு மிதக்க விட்டு கரைத்தனர்

குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
Published on

கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரத்தில் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ குலசேகர நங்கை பக்தர்கள், ஊர் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் 8-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

2-வது நாளான நேற்று காலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனையும் அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதலும் நடந்தது. மாலையில் குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக குலசேகரபுரம் லட்சுமிபுரம் சந்திப்பில் உள்ள மயான சுடலைமாட சுவாமி கோவில் அருகில் உள்ள புத்தன் ஆற்று கரையை சென்றடைந்தது.

அங்கு உள்ள படித்துறையில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன்பிறகு ஆற்றில் அகல் விளக்கு மிதக்க விட்டு முளைப்பாரியை கரைத்தனர். 

இந்நிகழ்வில் திரளான சுமங்கலி பெண்கள், சிறுமிகள் மற்றும் புதுமண தம்பதியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com