நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்

பகவதி அம்மன் வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடினர்.
நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்
Published on

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. அன்னதானத்தை பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் நயினார் பாலாஜி தொடங்கி வைத்தார்.

மாலையில் பரதநாட்டியமும் ஆன்மீக உரையும் நடந்தது. பின்னர் பக்தி இன்னிசை பட்டிமன்றமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல்களை பாடினர். கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக் காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதர்சன், மாவட்ட துணைசெயலாளர் சுகுமாரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடந்தது.

7-ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்புஅலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com