பவித்ரோற்சவம்.. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து மாலையில் யாகசாலையில் வழிபாடு, ஹோமங்கள், நிவேதனம் நடைபெற்றன.
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான நேற்று பவித்ர சமர்ப்பணம் நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவர் பத்மாவதி தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயார், வீதிஉலா வரும் உற்சவர்கள், துணை சன்னதிகள், பரிவார தெய்வங்கள், விமான பிரகாரம், கோவில் கொடிக்கம்பம் ஆகியவற்றுக்கு பவித்ர மாலைகள் சம்பிரதாயமாக சமர்ப்பிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை யாகசாலையில் வழிபாடு, ஹோமங்கள், நிவேதனம் மற்றும் தீர்த்த பிரசாதம் வினியோகித்தல், கோஷ்டி கானம் ஆகிய வேத சடங்குகள் நடந்தன.

உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், உதவி அதிகாரி தேவராஜுலு மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவித்ரோற்சவம் 3-வது நாள் உற்சவம் நடக்கிறது. அதையொட்டி காலை சுப்ரபாத சேவை முடிந்ததும் சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை சுத்தி நடைபெற்றது. அதன் பிறகு யாக சாலைக்கு உற்சவமூர்த்தியை கொண்டு வந்து, ஹோமங்கள், மஹாபூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், பவித்ர விசர்ஜனம், நிவேதனம், கும்பாப்ரோஷணம், தீர்த்தப்பிரசாத வினியோகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் திருமஞ்சனம், சக்கரஸ்நானம் நடைபெற்றது. இரவு நடக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2.15 மணிக்கு கோவில் மூடப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com