சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

தற்போது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை யொட்டி கேரள பக்தர்களின் வருகை சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அதிகமாக உள்ளது. இக்கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது.

பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டுதோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாக்கலமாக நடத்தப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அது போல் நேற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மூலம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com