திருப்பதி கோவில்களில் ராம நவமி ஆஸ்தானம்

ராம நவமி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
திருப்பதி கோவில்களில் ராம நவமி ஆஸ்தானம்
Published on

திருப்பதி:

பகவான் ஸ்ரீ ராமரின் அவதார தினமான ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெற்றன. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள், சிறப்பு அபிஷேகங்கள் என களைகட்டியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராம நவமி ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத பண்டிதர்கள் புருஷசூக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்ச சாந்தி மந்திரங்கள் மற்றும் பாசுரங்களை ஓதினர். அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமந்த வாகன சேவை, இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் கோவிலில் உள்ள தங்கவாசலில ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.

ராமநவமி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) இரவு 8 முதல் 9 மணி வரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ராம நவமியையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் சாமியை துயிலெழுப்பி மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 முதல் 9 மணி வரை உற்சவர்களான சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.மாலை 3 முதல் 4 மணி வரை பெரியஜீயர் சுவாமி மடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் புதிய வஸ்திரத்தை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர். அதன்பின் ராமரின் ஜென்ம புராணம் வாசிக்கப்பட்டது.

இரவு 7 முதல் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சீதாராமர் கோவிலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி மூலவர் மற்றும் உற்சவர்களான சீதா-ராமருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com